மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415 ஆன்மீகம் அறிவோம்

மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415
மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

நான் எனது சிறு வயது முதல் முகநூலில் உலவ ஆரம்பித்த காலம்வரை சூத்திரன் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால் முகநூலிற்கு வந்தபின் ஒரு சமயம் ஒரு திக கழகத்தை சேர்ந்த நாத்திகரிடம் விவாதிக்க நேரிட்டபோது அவர் என்னை சூத்திரன் என்றார். அப்போது தான் அவ்வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதற்கு முன்பு அந்த வார்த்தையை கேள்விப்பட்டதில்லை என்பதே நிதர்சனம். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு பிராமணரும் என்னை சூத்திரன் என்று அழைத்ததில்லை..!

இத்தனைக்கும் எனக்கு எண்ணிலடங்கா பிராமண நண்பர்கள் உண்டு. அவர்கள் வாழ்வில் அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்களா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால் இந்த நாத்திகர்கள் போர்வையில் இருக்கும் மாற்று மதத்தவர்கள் “சூத்திரன்” “சூத்திரன்” என்று கத்திக் கத்தி தமிழர்கள் அனைவருக்கும் சூத்திரன் என்ற பட்டத்தை சூட்டுவதோடு அதற்கு வேசிமகன் என்றொரு பொருளையும் தருகின்றனர். ஆனால் சூத்திரன் என்ற செல்லை என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

“மண்மகள் புதல்வர் வாய்ந்த
வளமையர், களமர் என்றும்
உண்மைசால் சதுர்த்தர் மாறா
உழவர், மேழியர், வேளாளர்
திண்மைகொள் ஏரின் வாழ்நர்
காராளர், வினைஞர் செம்மை
நண்ணுபின் னவர் பன் னொன்று
நவின்ற சூத்திரர்தம் பேரே”

சூடாமணி நிகண்டு.

விளக்கம் : சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள். வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர் என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர் என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும், பின்னவர் என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக சூத்ர என்ற சொல்லாடலானது வர்ணம் தவிர்த்து பல பொருள்களில் வழங்கப்படடிருந்தாலும் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் அதில் வரும் வாயிலார் புராணத்தில் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்” என்றும், இளையான்குடி மாற நாயனார் புராணத்தில், “வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்” என்றும் இரு நாயன்மார்களின் பழமையையும் வாய்மையையும் பெருமையையும் உடைய நல்ல சூத்திரர் குலம் என்றும் மிகப் பெருமையாகவே பாடி உள்ளார்.

அதோடு சூத்திரன் என்ற சொல் இராஜராஜ சோழனுக்கு நிகராக உயர் பொருளில் வழங்கப்பட்டது தொடர்பாக சோழர் கால செப்பேடுகளில் உள்ளது. ஆனால் அங்கும் வேசிமகன் என்றோ வைப்பாட்டி மகன் என்றோ இல்லாமல் உயர்ந்த பொருளில் சூத்திரன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
அதாவது கடைநிலை ஊழியனான சூத்திரனும், பேரரசர் இராஜராஜனும், ஒரே நிலையில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.
ஆனால் இப்படி தமிழ் இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும் சிறப்பித்து கூறப்படும் சூத்திரன் என்ற சொல்லுக்கு பொருளாக வேசிமகன் என்பதற்கு ஆதாரமாக திராவிடவாதிகள் கூறுவதாவது மனுதர்மம், அத்தியாயம்-8ன் 415 ஆவது ஸ்லோகமாகும்,

“த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய”

இதை பெரியாரின் பார்வையில் சூத்திரன் யார் என்பதை மனுவை அடிப்படையாக கொண்டு பார்க்கலாம். இவர்கள் மேற்கூறிய ஸ்லோகத்திற்கு விளக்கமாக சொல்வதாவது சூத்திரன் என்பவன் 7 வகைப்படுவானாம். அதாவது,

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2.யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

4.விபச்சாரி மகன்.

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

இதற்கு பெரியார் கூறிய ஏழு வகையினருக்கான விளக்கத்தை பார்ப்போம்.

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

(அதாவது உங்களில் யார் யாரெல்லாம் போரில் புறங்காட்டி ஓடியிருக்கிறீர்கள்?? ஒருவேளை ஓடி இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று பெரியார் சொல்ல வருகிறார். ஒருவேளை நீங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடவில்லை எனில் பெரியாரிஸ்டுகளின் சூத்திரன் என்ற லிஸ்ட்க்குள் வரமாட்டீர்கள்.)

2.யுத்தத்தில் கைதியாக பிக்கப்பட்டவன்.

(உங்களில் யாராவது போரில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளீர்களா?? ஒருவேளை இருந்தால் நீங்கள் சூத்திரன் என்று பெரியார் சொல்கிறார். )

3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.

(ஊழியம் என்பதே கூலிக்கான வேலையை கூலி இன்றி செய்வது. அதையும் பிராமணன் என ஒரு தனிமனிதன் மேல் உள்ள பக்தியினால் செய்பவர் உங்களில் யாராச்சும் இருக்கீங்களா?? இதில் இருந்தால் நீங்களும் சூத்திரன் என்று பெரியார் சொல்றார்.)

4.விபச்சாரி மகன்

(யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்.)

5.விலைக்கு வாங்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா? விலை போனவர்கள்?? இருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம்.)

6.விலைக்கு கொடுக்கப்பட்டவன்.

(யாராச்சும் இருக்கீங்களா?? அதாவது உங்களை யாராவது விலைக்கு விற்றிருந்தால் நீங்களும் சூத்திரன் தானாம். )

7.தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.

(ஊழியம் என்பது கூலிக்கான வேலையை கூலியே வாங்காம பண்ணுறது அதையும் தலைமுறை தலைமுறையாக பண்ணும் யாராச்சும் இருக்கீங்களா?? இருந்தால் நீங்களும் சூத்திரன்தானாம்‌.)

மேற்கூறிய பட்டியலில் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் அந்த பட்டியலில் இருப்பதாக கூறி உங்களை சூத்திரன் என்று சொல்பவர்மேல் (பெரியாரிஸ்டுகள்) உங்களுக்கு கோபம் வரவேண்டுமா?..?? அல்லது அந்த அட்டவணை மேல் உங்களுக்கு கோபம் வர வேண்டுமா என்று சிந்தியுங்கள் மக்களே…!

(அதோடு பிராமணர்களை தவிர அனைவரும் சூத்திரர்கள்தான் என்று கூறிய பெரியாரின் பார்வையில் அவரே ஒரு சூத்திரன்தான் என்பது வேறு கதை)

இனி பெரியார் கூறிய அந்த மனுவின் ஸ்லோகத்திற்கான உண்மையான பொருள் என்ன என்பதை பார்க்கலாம்,

மனுசாஸ்திரம், அத்தியாயம்-8, ஸ்லோகம்-415 :

“த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய”

ஏழு வகையான சேவை செய்பவர்கள் உள்ளனர்.

(குறிப்பு : இச்சுலோகத்தில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை. ஆக இது சூத்திரனுக்கு உண்டான குணங்கள் என்பது பெரியாரிய இயக்கங்கள் எடுத்து கட்டிய கட்டுக்கதை. இல்லை இல்லை அது சூத்திரனைத்தான் குறிக்கிறது என்போர் தாராளமாக அவர் கூறிய பட்டியலில் ஏறி உக்காந்துக்கோங்க)

1.ஒரு பதாகையின் கீழ் கைப்பற்றப்பட்டவர். அல்லது ஒரு தரத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டவர்.

2.சேவை செய்ய விருப்பமுடையவன்.

3. தனது மனைவியை தவிர இன்னொரு பெண்ணுடனான தவறான உறவின் மூலம் பிறப்பவர்கள் ( வைப்பாட்டி மகன்)

4.விலைக்கு வாங்கப்பட்டவர்.

5.விலைக்கு கொடுக்கப்பட்டவர்.

6.பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்பவன்.

7.தண்டனையால் அடிமை அல்லது தண்டனையின் மூலம் அடிமைப் படுத்தப்பட்டவன்.

மேலே, கொடுத்த வசனங்களில், சூத்திரன் என்ற வார்த்தை இல்லை. மேலும், விபச்சாரி மகன் என்று சூத்திரனை அர்த்தம் கூறுகிற எந்த வார்த்தையும் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அதோடு இன்று நமது கைகளில் புழங்கும் மனுஸ்மிருதியைப்பற்றி காந்தியடிகள் போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டாலும், மனு ஸ்மிருதியைப் பற்றி கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் பேசியிருந்தாலும் 1794 ஆம் ஆண்டிற்கு முன்பு இதை ஏற்றிருக்கலாம். ஏனெனில் இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு அல்லது பல இடைச்செருகல்களின் காரணமாக சூத்திரர்கள் பற்றிய பல ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் எனக்கு மனுஸ்மிருதியில் முரண்பட்ட கருத்துகள் உண்டு. இன்று நமது கைகளில் புழங்கும் மனுவில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்றுச்சான்றுகள் இல்லை. ஆனால் மனுவின் அடிப்படையில் மனுஸ்மிருதியானது “க்ருதயுகத்துக்கானது” என்பதால் இதை தூக்கி பிடிக்க அவசிமில்லை என்பது எனது பார்வையாகும்.!

“க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:
த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா”

– மனு ஸ்மிருதி.

ஆக இன்னும் மனுவின் அடிப்படையில் இந்துக்களை சூத்திரர்கள் என்று விமர்ச்சிப்பது தேவை இல்லாத ஆணியே. இப்படியாக தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக ஒன்றை மட்டும் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது சூத்திரன் என்ற பெயருக்கு இத்தகு மேம்பட்ட பொருள்கள் இருந்தபோதும் இக்காலத்திலேயே இத்தனை தவறான விமர்ச்சனங்களை வைக்கின்றனர் எனில் சைவ சமண மோதல்கள் இருந்த காலங்களில் எந்த அளவுக்கு விமர்ச்சனங்கள் இருந்திருக்கும்.? இதன் அடிப்படையிலேயே இன்று நமது கைகளில் புழங்கும் இந்து தர்ம நூல்களில் பலவற்றுள் இடைச்செருகல்களுடனும் கட்டுக்கதைகளுடனும் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதற்கு பெரியாரிய இயக்கங்களே ஆகச்சிறந்த உதாரணம்.!

இப்படி தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த பொருளில் நன்மதிப்பிற்குரிய இடங்களிலும், இராஜராஜ சோழனுக்கே நிகரான மதிப்புடைய இடங்களிலும் பயன்படுத்தப்படுள்ள சூத்திரன் என்ற சொல்லை வேசி மகன் என்றோ அல்லது வேறு எந்த தவறான விளக்கங்களுடன் வரலாறுகளில் பதியப்பட்டிருந்தாலும் அவற்றில் எமக்கு உடன்பாடில்லை. சூத்திரன் என்ற சொல்லின் இன்றைய நிலைக்கு மிகவும் வருந்துகிறேன். நல்லவற்றை ஏற்றுக்கொள்ள கற்றுத்தந்த இந்த சமூகம் தேவையற்றவற்றை புறந்தள்ளவும் கற்றுத்தந்துள்ளது. ஆக நாம் இவர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டு ஒதுங்கியே நிற்க வேண்டும்.!

– பா இந்துவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *