நம் கோவில்கள் உண்மையில் 1000 ஆண்டுகளுக்கு மேலும் பழமையானவையா?

IMG 20240201 WA0047 Thavvam

நண்பர் ஒருவரின் ஒரு சில கேள்விகளின் அடிப்படையில் இன்றைய பதிவை இரு கேள்விகளாக பிரித்து அதற்கான பதிலையும் இன்றைய பதிவில் பார்ப்போம்!!!

1. கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தமிழகத்தில் கோவில் கட்டுமானங்கள் இருந்ததா? குறிப்பாக சங்ககாலத்தில் கோவில்கள், பூஜைகள், வழிபாடுகள் இருந்ததா?

2. முற்காலங்களில் இருந்த கோவில் கட்டுமானங்களில் பெரும்பகுதி அழிந்துவிட்டதே? எனில் என்னென்ன பொருட்கள் கொண்டு அந்த கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கும்?

முதலில் கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கோவில் கட்டுமானங்களே இல்லை என்பது நகைப்புக்குரியது. இது ஆய்வாளர்கள் வட்டத்திலும் பேசப்படும் செய்திதான் என்றாலும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மாமல்லபுரத்திலுள்ள சாளுவன்குப்பம் எனுமிடத்தில் சமீபமாக கண்டெடுக்கப்பட்ட சுடு செங்கற்களால் கட்டப்பட்ட முருகன் கோவில், குடிமல்லத்திலுள்ள பழமையான சிவலிங்கம் போன்றவை குறையாமல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவில் கட்டுமானங்கட்டுமானங்களாகும். சங்ககாலத்தை எடுத்துக்கொண்டால் காலத்தால் மகவும் முந்தைய “புறநானூற்றில்” சிவன் கோவிலைச் சுற்றி சிவனடியார்கள் சிவ வழிபாடு செய்தமைக்குச் சான்றுகள் உண்டு.

கோவில்கள்
படம் 1 : திருச்செந்தூர் முருகன் கோவில்
படம் 2 : சாளுவன்குப்பம் முருகன் கோவில் சுடுசெங்கல் கட்டுமானம் 
படம் 3 : குடிமல்லம் சிவன் கோவில்

கோவில்கள் குறித்த சங்க இலக்கிய சான்றுகள்

புறநானூறு

சங்ககாலத்தை எடுத்துக்கொண்டால் காலத்தால் மகவும் முந்தைய “புறநானூற்றில்” சிவன் கோவிலைச் சுற்றி சிவனடியார்கள் சிவ வழிபாடு செய்தமைக்குச் சான்றுகள் உண்டு.”பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே”- புறநானூறு.

பொருள் : உனது கொற்றக்குடை முனிவர்களால் போற்றப்படும் “முக்கட் செல்வனாகிய” சிவபெருமான் கோவிலை வலம் வருவதற்கு தாழ்க! உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே! என்கிறார். இந்த புறப்பாடலில் சிவபெருமானை முனிவர்கள் சுற்றி வந்து வழிபட்ட செய்தி உள்ளது. கோவில் இருந்தால் தான் சுற்றிவந்து வழிபட முடியும்.

அதோடு இதே புறநானூற்றின் இன்னொரு பாடலில் “இந்திரனுக்கு” கோவில் இருந்த தகவலைக் குறிப்பிடுகிறது.“திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார் அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசும் கறங்க ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே”- புறநானூறு.

பொருள் : வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வஜ்ரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோவிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது என்பது பொருளாகும். இப்பாடலில் இந்திரனுக்கு சங்ககாலத்தில் கோவில் இருந்த தகவல் தெளிவாக உள்ளது.

பட்டினப்பாலை

மேலும் சங்க இலக்கியங்களில் ஒன்றான “பட்டினப்பாலையில்” காவிரி பூம்பட்டிணத்தில் இருந்த பல வகையான கொடிகளை பற்றி கூறும்போது,”மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்”என்கிறார் புலவர். அதாவது தெய்வத்தை வைத்து பூஜை செய்யும் உருவம் பெறித்த கொடி பறந்த நிகழ்வை (அதுவும் கோவில் வாசலில்) தான் முதலில் கூறுகிறது இப்பாடல்.

பதிற்றுப்பத்து

இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக “பதிற்றுப்பத்தில்” திருமாலுக்கு கோவில் இருந்ததையும் அக்கோவிலுக்கு பூஜைகள் எப்படி நடைபெற்றது? மக்கள் எப்படியெல்லாம் இறைவனை வழிபட்டார்கள் என்ற செய்திகள் வரை மிகத் தெளிவாக உள்ளது. இப்பாடலில் புலவர் “காப்பியாற்றுக் காப்பியனார்” என்பவர் திருமாலின் திருவடிகளை வணங்கும் காலமாக, பனி நிறைந்த நாளைக் குறிப்பிடுகையில்,”குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து கண் பொரு திகிரி கமழ் குரல் துழாலஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர மணி நிற மை இருள் அகல நிலா விரிபு கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டுஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு”- பதிற்றுப்பத்து.

பொருள் : குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய மண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில் கைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின் நால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க, தெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க, உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி, வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும், கண்ணைக் கூசவைக்கும் சக்கரப் படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர். இப்பாடலில் மிகத் தெளிவாக பக்தர்கள் ஒரே நேரத்தில் கைகளை மேலே உயர்த்தி ஒலி எழுப்பி, மணி அடித்து, திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கியுள்ள செய்தி உள்ளது.

இந்த பாடல் சங்ககாலத்தில் நிச்சயமாக பெரிய கோவில் கட்டுமானங்கள் இருந்தது என்பதை உறுதிபடுத்துவதோடு வழிபடு முறைகளையும் எடுத்தியம்புகிறது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலானது இதேப்போன்று மிகப்பழமையான கோவில்தான் என்பதை சங்க இலக்கியங்களில் காலத்தால் மிகவும் முன்னதான புறநானூற்றிலுள்ள, புலவர் “மதுரை மருதன் இளநாகநாரின்” ஒரு பாடல் மூலமாக அறியலாம்.

“தாழ்நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுஆழ் எக்கர் மணலினும் பலவே”அதாவது, பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக என்று பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை புலவர் மதுரை மருதன் இளநாகநார் புகழ்ந்து பாடுகிறார். இன்று நமக்கு கிடைக்கும் இலக்கியங்களில் காலத்தால் மூத்தது புறநானூறு ஆகும். அந்நூலின் காலம் பொ.மு 300 வரை எடுத்துச்செல்கிறார்கள் ஆய்வாளர்கள் எனும்போது திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகனை இவ்விலக்கியம் பேசுகிறது எனும்போது இக்கோவிலும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவதன் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதுதான் திருச்செந்தூர் முருகன் கோவில் என்று உறுதியாகக் கூறலாம்.

இது தவிர்த்து அகநானூறு, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, தேவாரம், கந்தபுராணம், திருப்புகழ், முதுமொழி போன்ற பல இலக்கியங்களிலும் திருச்செந்தூர் செந்தில்நாதன் முருகனைப்பற்றிய குறிப்புகள் உண்டு.

முற்காலங்களில் கோவில்கள் கட்டுமானம்

அடுத்ததாக சங்ககாலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டது? எனில் அக்காலங்களில் கோவில்கள் என்னென்ன பொருட்கள் கொண்டு கட்டப்பட்டன என்பதை பார்க்கலாம்.

முற்காலங்களில் செங்கல், மரம், உலோகங்கள், மற்றும் சுதைப் பொருட்களால்தான் கோவில் கட்டுமானங்கள் கட்டப்பட்டது. இந்த மரபை மாற்றியவர்கள் முற்கால பாண்டியர்களும், பல்லவர்களும்தான் என்பது அறிஞர்களின் குறிப்பிடுகிற்ர்கள்.

இதற்கு ஆதாரமாக களப்பிர்களை வெற்றிகொண்டு பல்லவ அரசை நிறுவிய சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் இன்றைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் எடுக்கப்பட்ட குகைக்கோவிலே இதற்கு உதாரணமாகும். இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.”ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம் விசித்ரசித்தேன நிர்மாபிதம் ந்ருபேன ப்ரஹ்மேஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதனம்”

பொருள் : செங்கல் இல்லாமல், மரம் இல்லாமல், உலோகம் இல்லாமல், சுதைப் பொருட்கள் இல்லாமல், பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற மும்மூர்த்திகளுக்காக இந்தக் கோவில் விசித்திரசித்தனால் கட்டுவிக்கப்பட்டது. அதாவது முற்காலங்களில் கட்டப்பட்ட கோவில்கள் இயற்கை சீற்றங்களால் அழிந்து போனதற்கு காரணம் இதுபோன்ற கட்டுமானங்களே என்பதை நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர். இதனால் பிற்காலத்தில் கோவில் கட்டுமானங்களை மாற்றி அமைத்தனர். இன்று இருக்கும் பெரும்பாலான கோவில்கள் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால், படையெடுப்பாளர்களால் சிதையுண்டு பிற்காலத்தில் வலிமையான கட்டுமானங்கள் அக்கோவில்களின் மேற்புறத்தில் எழுப்பப்பட்டு இன்று கம்பீரமாக காட்சியளிக்கின்றன.!-

பா இந்துவன்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *