இலங்கை மாணவர்களுக்காக இந்திய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டம்

image 3 Thavvam

இலங்கையை சேர்ந்த மாணவர்களுக்காக இந்திய அரசு அளிக்கும் சுமார் 200 முழு நிதியுதவி புலமைப் பரிசில் இடங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது.

சட்டம், மருத்துவம், துணை மருத்துவம் ஆகியவை தவிர்த்த பிற துறைகளுக்கான இந்த புலமை பரிசில்கள் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் வழியே வழங்கப்படுகின்றன. 2024 – 2025 கல்வி ஆண்டிற்கான இந்த புலமைப்பரிசில்கள், பிரத்தியேகமாக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கொழும்பு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

திட்டங்களின் வகைகள்

1) நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், கலை, அறிவியல், வணிகம், பொருளாதாரம், மனிதநேயம் மற்றும் போன்ற பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை உள்ளடக்கியது.

2) மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் முதுகலை பட்டப்படிப்புகள்.

3) ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம்: குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை பட்டப்படிப்புகளின் கீழ், இளங்கலை பொறியியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பப் படிப்புகள்.

இந்த மூன்று வகை திட்டங்களிலும், முழு கல்விக்காலத்திற்கான கல்விக் கட்டணம், உணவுக்கான மாதாந்திர உதவித்தொகை, நூல்கள் மற்றும் உபகரணங்களுக்கான வருடாந்திர உதவித்தொகை ஆகியன வழங்கப்படும்.

மேலும் இந்தியாவின் அருகிலுள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கல்விச் சுற்றுப்பயணங்கள் செல்வதற்க்கான வருடாந்திர மானியம், பல துணைப் பலன்களும், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகங்களுக்குள் தங்குவதற்கான விடுதி வசதியும் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக இந்திய அரசு, இலங்கை அரசின் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து தகுதியானவர்களை தேர்வுசெய்யவுள்ளது.இலங்கை கல்வி அமைச்சகத்தின் www.aohe.gov.lk என்ற இணையத்தளத்தில் மேலதிக விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிய இந்திய தூதரகம், கொழும்பு ([email protected]) அல்லது இலங்கை அரசின் கல்வி அமைச்சகத்தை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *