“தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் வைத்தே கொளுத்த வேண்டி இருக்கும்” என இலங்கை மீனவர்கள் பரபரப்பு பேட்டி

image 47 Thavvam

“எல்லையை தாண்டி வரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்” என்று இலங்கை நாட்டு மீனவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதாகச் சொல்லி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

சென்ற பிப்ரவரி 4ஆம் தேதி அன்றும் இப்படி இரண்டு விசைப்படகுகள் மூலமாக மீன்பிடிக்கச் சென்ற 23 ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள்
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இரு படகுகளின் ஓட்டுனர்களாக உள்ள இரண்டு மீனவர்களுக்கு தலா 6 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றுமொரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லையைத் தாண்டி வந்துள்ளதாகக் கூறி அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் மற்ற 20 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி இலங்கை நீதிமன்றம் அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நேற்று(18/02/24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவ்வாறு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது காரணமாக கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இதற்கிடையில் இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசு தலையிட்டு கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மீனவர்கள்: இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை இவ்வாறு கைது செய்வது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், இலங்கை மீனவர்கள் அந்நாட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எல்லையை தாண்டி வரும் மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்ட இலங்கை மீனவர்கள், “எக்காரணம் கொண்டும் இந்த மதம் சார்ந்த நிகழ்வை புறக்கணிப்பதைக் காரணமாகக் காட்டி கைதானவர்களை விடுதலை செய்யச் சொல்வதை ஏற்க முடியாது. எங்கள் நாட்டுக் கடற்படையினர் சட்டப்பூர்வ முறையில் தான் அவர்களைப் பிடித்துள்ளனர். எல்லையை தாண்டி வந்ததன் காரணமாகவே அவர்களைக் கைது செய்துள்ளனர். எனவே, அவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடக்கூடாது என்று இலங்கை அரசிற்கு நாங்கள் கோரிக்கையை விடுக்கிறோம்.

படகுகளைக் கொளுத்துவோம்:
எல்லையை தாண்டி உள் நுழையும் அனைத்து மீனவர்களையும் கைது செய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எல்லையை தாண்டி வரும் மீனவர்களை 5 – 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் நாங்களே நேரடியாக கடலுக்குள் சென்று அப்படகுகளை எரிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு இந்திய மீனவர்கள் எல்லையைத்தாண்டி வருவதைத் தடுக்க வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகை இட இருக்கிறோம். “தொடர்புடைய மீனவர்களை இந்திய அதிகாரிகள் நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்” என்றனர். அவர்களின் இப்பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *