Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், பரோபகாரருமான சுதா மூர்த்தி (73), இந்தியக் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தன்னுடைய X தள பதிவில் “இந்திய குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தி அவர்களை மாநிலங்களவைக்கு நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது. அவர் ராஜ்யசபாவில் இருப்பது நம் நாட்டின் பெண்சக்திக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். நமது தேசத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை இது எடுத்துக்காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
தனது பரோபகார செயல்கள் மேலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியத்திற்கான தன்னுடைய பங்களிப்புகளுக்காக புகழ்பெற்ற சுதா மூர்த்தி அவர்கள் சமூகத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது நாவல், டாலர் பஹு (Dollar bahu) , முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான பாராட்டைப் பெற்றது மற்றும் 2001 இல் ஜீ டிவி (Zee TV) மூலம் தொலைக்காட்சி தொடராக மாற்றப்பட்டது.
கர்நாடகாவில் தேசஸ்த மத்வ பிராமண குடும்பத்தில் பிறந்தவர் சுதா மூர்த்தி. அவரது மகள் அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்தார், உலகளாவிய விவகாரங்களில் தன் குடும்பத்தின் செல்வாக்கிற்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறார்.
சுதா மூர்த்தி, தனது பெயரில் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மேலும், பெண் ஆளுமைகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 775 கோடியாக இருந்த போதிலும், அவர் எளிமையான ஒரு வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்.
சுதா மூர்த்தி கடந்த முப்பது வருடங்களாக புதிய புடவை வாங்கவில்லை என்று முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஆன்மீக நம்பிக்கைகளில் வேரூன்றிய இந்த முடிவு, புனித நகரமான காசிக்குச் சென்றதிலிருந்து உருவானது, காசி செல்லும் சில பக்தர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்றை தியாகம் செய்வதாக இறைவனுக்கு காணிக்கையளிக்கும் வழக்கத்திற்கேற்ப, அங்கு அவர் தனக்குப் பிடித்தமான ஒன்றான புடவைகளை காணிக்கையாக விட்டுக்கொடுத்தார். அப்போதிருந்து, அவர் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே வாங்குபவராக மாறிவிட்டார்.
சுதா மூர்த்தியின் கணவர், இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது நிகர மதிப்பை 4.4 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 36,690 கோடி) என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டிருந்தாலும், அவரும் தன் மனைவியுடன் அடக்கமான வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்கிறார். புத்தகங்கள் மீது ஆர்வமுள்ள வாசகர்களான இருவரும், சுமார் 20,000 புத்தகங்களை வைத்துள்ளது குறிபிடத்தக்கது.
சுதா மூர்த்தியின் புடவைகள் உணர்வுப்பூர்வமாக பெரும் மதிப்பைக் கொண்டவை, அவை அவர் மீது அன்பானவர்கள் மற்றும் அவர் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அவருக்குப் பரிசளிக்கப்பட்டவை ஆகும், அதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் குழு தயாரித்த இரண்டு கை எம்ப்ராய்டரி புடவைகள் அடங்கும்.
எளிமை, பரோபகாரம் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளால் அடையாளப்படுத்தப்படும் சுதா மூர்த்தியின் வாழ்க்கைப் பயணம், நோக்கம் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. ராஜ்யசபாவிற்கு அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்திய சமூகத்தில் அவரின் நற்பண்புகள் மற்றும் பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக திகழ்கிறது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்