Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
ரஷ்யா மீதான உக்ரைனின் சமீபத்திய ஆச்சரியமளிக்கும் தாக்குதல் மற்றும் உக்ரைன் எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்கா(US) அறிவித்துள்ளது.
ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன திடீர் தாக்குதலை நடத்திய சமயத்தில் உக்ரைனுக்கான புதிய $125 மில்லியன் இராணுவ உதவிப் பொதியை (package) அமெரிக்கா வெளியிட்டது பேசு பொருளாகியுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, ரஷ்யாவுடனான அதன் தற்போதைய மோதலின் மத்தியில் உக்ரேனுக்கான அமெரிக்காவின் நீடித்த ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிதி உதவியை உள்ளடக்காத சமீபத்திய உதவிப் பொதி, அமெரிக்க கையிருப்பில் இருந்து பெறப்படும். இதில் வான் பாதுகாப்பு இடைமறிகள்( air defense interceptors), ராக்கெட் அமைப்புகள் மற்றும் பீரங்கிகளுக்கான வெடிமருந்துகள், மல்டி-மிஷன் ரேடார்கள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த ஆதரவு, உக்ரைனின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களை மேம்படுத்துவதையும், உக்ரைனின் துருப்புக்கள், பொதுமக்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்பை ரஷ்ய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் எடுத்துரைத்தார்.
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற உக்ரைனின் எதிர்பாராத தாக்குதலுடன், இந்த உதவி அறிவிப்பு நேரம் மிக அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் எல்லையில் இருந்து ரஷ்யாவினுள் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரேனியப் படைகள் மோதல் தொடங்கியதில் இருந்து மிக முக்கியமான எல்லை தாண்டிய நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன. உக்ரேனிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதன் மூலோபாய முக்கியத்துவத்தை (strategic importance) வலியுறுத்தினார். புதிய உதவியானது இந்த சூழலில் உக்ரைனின் முயற்சிகளை வலுப்படுத்தக்கூடும்.
ரஷ்யா மீதான தாக்குதல் நடத்துவது மட்டுமன்றி, உக்ரைனின் முக்கிய தளவாட மையமான போக்ரோவ்ஸ்க்-கின் பாதுகாப்பிற்கும் இந்த உதவிப் பொதி முக்கியமானது. தற்போது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போக்ரோவ்ஸ்க் பகுதியை நோக்கி ரஷ்யப் படைகள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் பரந்த பாதுகாப்பிற்கு இந்த இடத்தின் மூலோபாய முக்கியத்துவம் அவசியமானது. போக்ரோவ்ஸ்க் மற்றும் பிற முக்கியமான பகுதிகளில் உக்ரைனின் நிலையை வலுப்படுத்த இந்த உதவி பயன்படுத்தப்படலாம்.
உதவித் தொகுப்பு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினாலும், அது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ரஷ்யாவின் விரிவான இராணுவ வளங்களுடன் ஒப்பிடுகையில் உக்ரைனின் ஆயுதக் கிடங்கு சிறிய அளவில்தான் உள்ளது.
இந்த உதவி உக்ரைன் தனது தற்போதைய பாதுகாப்பைப் பராமரிக்கவும், மேலும் அடுத்தடுத்த ஈடுபடுதல்களுக்குத் தயாராகவும் உதவும், ஆனால் ஆயுதங்கள் மற்றும் துருப்புக்களின் எண்ணிக்கையில் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை விஞ்சியுள்ளதால் சவால்கள் மிகவும் பெரியதாக உள்ளன.
இந்த ஆதரவு, உக்ரைனுக்கு தயாராகும் நேரத்தை அதிகரிக்கவும் அதன் காரணமாக தயார் நிலையை மேம்படுத்தவும் உதவுகிறது ஆனால் இராணுவ சக்தியின் அடிப்படை ஏற்றத்தாழ்வை இது மாற்றாது.
பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு $55.4 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது, இது உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காப்பதற்கான தற்போதைய உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்