Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
10 tips for newly married
“இனி இருவரும் ஒருவர் தான்!”
அந்த மகிழ்ச்சிகரமான திருமண நாளுக்குப் பிறகு வாழ்க்கை உங்களுக்கு ஒரு புதிய ஆரம்பம் ஆகும். பெற்றோரின் அரவணைப்பில் நீங்கள் வாழ்ந்து வந்த சூழலில் இனி உங்கள் அரவணைப்பில் ஒரு குடும்பம் ஏற்படுகிறது. இதனை எதிர்கொண்டு உங்கள் வாழ்க்கையை இனிமையாகவும், அமைதியாகவும் வாழ உதவும் சில கருத்துக்களை இங்கே காணலாம்.
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இருவரும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழகான ஆரம்பம். இது ஒரே நேரத்தில் சந்தோசமும், சவால்களும் நிறைந்த பயணம். புதியதாக திருமணம் ஆன தம்பதிகள், வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் அமையச் செய்ய சில முக்கியமான அறிவுரைகள்:
நல்ல உறவுகளின் அடிப்படையே வெளிப்படையான உரையாடல்கள் தான். உங்கள் எண்ணங்கள், கனவுகள், பயங்கள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருவர் மற்றொருவருடன் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளுங்கள். சின்ன விஷயங்களையும் பேசிக்கொள்வது, பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். உரையாடல்களே ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்கு புரிந்து கொள்ள உதவும்.
விரிவான உரையாடல்கள் மூலமும் அனுபவ செயல்பாடுகள் மூலமும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒவ்வொருவருக்கும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழல்கள் அடிப்படையில் தனித்துவமான எண்ணங்கள், பழக்கங்கள், நம்பிக்கைகள், நோக்கங்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பார்வைக் கோணத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். விவாதம் வரும்போது அதனைத் தவிர்க்காமல், ஏன் முரண்பாடு வருகிறது? அவர்களது கருத்து அல்லது செயலுக்கான காரணம் என்னவென்று புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
திருமண உறவில் நம்பிக்கை ஒரு தூணாக இருக்கிறது. இவ்வளவு காலம் யாரும் பார்க்காத நம்முடைய சூழலையும் நடவடிக்கைகளையும் உடன் இருந்து ஒருவர் பகிரும் சூழல் ஏற்படும் போது சற்று தடுமாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். நம்மைப்பற்றிய அத்துனை விடயங்களையும் அறிந்து, துணையானவர் தம்மைப்பற்றிய அத்துனை விடயங்களையும் பகிர்ந்துகொள்கிறார் எனும்போது நம்பிக்கை மிகவும் இன்றியமையாதது. ஒரு முறை நம்பிக்கை ஏற்ப்பட்டு விட்டால், அது உறவில் உறுதியையும் நிலைப்புத்தன்மையையும் ஏற்படுத்தும். உறுதியான, நேர்மையான சொல்,செயல், நடவடிக்கைகள் மூலம் இந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஒருவருக்கு ஒருவர் முழுமையாக புரிதல் ஏற்படும் வரை உங்கள் வாழ்க்கை துணைக்கு தனிப்பட்ட இடமும், நேரமும் தேவைப்படலாம். அதே நேரத்தில் இருவரும் இணைந்து செலவிட வேண்டிய நேரமும் முக்கியம். இரண்டையும் சீராக பராமரிக்க முயற்சி செய்யுங்கள். சில காலம் முழுமனதான புரிதல் வரும்வரை ஒருவருடைய வரம்பில் ஒருவர் அத்துமீறல் செய்யாமல் நடந்துகொள்ளுதல் மற்றும் சுதந்திரமளித்தல் முக்கியமான புரிதல் ஏற்படுத்தும் விடயமாகும்.
பணம் என்பது ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம். பண நெருக்கடி ஏற்படும் சூழல்களில் குடும்பத்தில் ஒற்றுமையின்மை ஏற்பட்டு நிம்மதி குறைவதை நம்மால் அனுபவத்தில் உணர முடியும். வருமானம், செலவுகள், சேமிப்பு பற்றிய விஷயங்களை திட்டமிட்டு பேசுங்கள். இருவரும் தம் எதிர்பார்ப்புகளையும் குடும்ப நிலை உணர்ந்து நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
10 tips for newly married
புதிய உறவுகள் வந்த பிறகு, பெற்றோர் மற்றும் பிற உறவுகளை எப்படி சமனில் வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து தமது துணையின் உறவுகளை மதிப்பளித்து நடத்துதல் நலம். இருவரும் ஒரே அணியில் இருந்து செயல்படுங்கள். இனி நீங்கள் இருவர் தாம் ஒரு குடும்பம், எனவே ஒருவருடைய குடும்பம் மற்றவருக்கும் முக்கியம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு தனி பரிமாணம் தேவைப்படும். முழுமையாக ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகும் வகையில் நடந்துகொள்வது அரிது. எனவே சில விடயங்கள் மாற்ற இயலாதது என்று உணர்ந்து அதனை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் துணையின் தனிப்பட்ட விருப்பங்களை, நேரத்தை, மற்றும் பழக்கங்களை மதிக்கவும். இது உறவைக் கடினமான கட்டங்களுக்கு செல்லாமல் பாதுகாக்கும்.
வாழும் காலத்தில் இனிய நினைவுகளை உருவாக்குவதற்கும் எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதற்கும் சேர்ந்து பேசுங்கள். ஒரு வீட்டை வாங்கும் கனவு, சுற்றுலா பயணம், குழந்தைகள், தொழில்நுட்ப வளர்ச்சி – இவை எல்லாம் சேர்ந்து பேசி திட்டமிட வேண்டும். எல்லா முக்கிய முடிவுகளும் இருவரும் இணைந்து எடுத்ததாக இருந்தால் தான் அவ்வுறவு என்றும் நீடிக்கும்
வாழ்க்கை என்பது சிறுசிறு மகிழ்ச்சிகளின் தொகுப்பாகும். ஒரு புன்னகை, ஒரு நேசம் நிரம்பிய பார்வை, சமையல் செய்து கொடுக்கும் நேசம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லுதல்,தனக்கு பிடிக்காமல் போனாலும் துணைக்கு பிடிக்கும் என்று ஏற்றுக்கொள்ளுதல்– இவை அனைத்தும் உறவைக் கட்டியெழுப்பும் கட்டடக் கல்லாகும். இதுபோன்ற சிறு விடயங்களைக்கூட ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒருவர் மற்றொருவரின் பிழைகளைப் பெரிதுபடுத்தாமல் அதனைத் திருத்தி, பொறுத்து வாழ வேண்டும். தவறு ஏற்பட்டாலும் அவர் நம் துணை என்று குறைகளை பின்னுக்குத்தள்ளி உறவை முன்னிலைப்படுத்துங்கள், அவர்களின் பிழையை மன்னித்து, உறவை மேலே உயர்த்துங்கள். மன்னிப்பும், மறப்பும் உறவின் வலிமையை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மரியாதையை அதிகரிக்கச் செய்யும்
திருமணம் என்பது ஒரு பயணத்தின் துவக்கம். இதில் மகிழ்ச்சியும் இருக்கும், சவால்களும் இருக்கும். இன்பமும் இருக்கும் துன்பமும் இருக்கும். காலமும் சூழலும் மாறிக்கொண்டே தான் இருக்கும். அனைத்தையும் தாண்டி நாம் நம் குடும்பத்தை சீராக கொண்டு செல்வதில் தான் அனைத்தும் உள்ளது.
இந்த 10 அறிவுரைகளை மனதில் வைத்து செயல்பட்டால், ஒரு உறுதியான, நேசமுள்ள, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை உருவாக்க முடியும்.உறவுகள் வளர ஒருவருக்கொருவர் இடம் கொடுங்கள், நேசியுங்கள், நம்புங்கள், ஆறுதல் அளியுங்கள், ஒருவரின் காலத்துக்கு மற்றொருவர் தான் மருந்து. இயற்கையில் மனிதன் பரிணமித்து வந்ததே இவ்வாறுதான், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள், ஒன்றாக பேசுங்கள், சிரியுங்கள், சாப்பிடுங்கள், சுற்றுலா செல்லுங்கள், காலத்தின் நகர்வில் வாழ்க்கையின் ஓட்டத்தில் புதிதாக கற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை அழகாக அமையும்!
10 tips for newly married
புதிதாக திருமணமாகவுள்ள தங்கள் சுற்றத்தாருடன் இப் பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
எமது வலையொளி : thavam media
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்